வங்காளதேசத்தில் அமெரிக்க எழுத்தாளர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை

வங்காளதேசத்தில் அமெரிக்க எழுத்தாளர் அவிஜித் ராய் கொலை வழக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி சையது உள்பட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.‌
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டாக்கா:

வங்காள தேசத்தில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்தவர் பிரபல வலைத்தள எழுத்தாளர் அவிஜித் ராய். மெக்கானிக் என்ஜினீயரான இவர் பயங்கரவாதத்துக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பல கட்டுரைகளை எழுதிவந்தார்.

இதனால் வங்காளதேசத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தன.‌ ஆனால் அவர் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான தனது கருத்துக்களை பதிவு செய்து வந்தார்.

வங்காளதேசத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட அவிஜித் ராய், அமெரிக்காவில் இருந்து அடிக்கடி வங்காள தேசத்துக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.‌ அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வங்காளதேசம் வந்திருந்த அவிஜித் ராய், தலைநகர் டாக்காவில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் தனது மனைவியுடன் கலந்துகொண்டார்.

புத்தக திருவிழாவை முடித்து விட்டு வெளியே வந்த போது அவர்களை இடை மறித்த மர்ம நபர்கள் சிலர் பட்டாக்கத்தியால் அவிஜித் ராயை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார். இந்தத் தாக்குதலில் அவிஜித் ராய் மனைவி படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு பின்னர் உயிர் தப்பினார்.

இந்த படுகொலையின் பின்னணியில் தடை செய்யப்பட்ட அன்சர் அல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இதுதொடர்பான வழக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி சையது என்பவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணையில் டாக்காவில் உள்ள சிறப்பு பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நீதிபதி இந்த வழக்கில் நேற்று தனது இறுதி தீர்ப்பை வழங்கினார். அதன்படி முன்னாள் ராணுவ அதிகாரி சையது உள்பட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.‌ இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com