

சீர்காழி:
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மத்திய,மாநில அரசால் பிறபிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டுக்கு ஒருவர் மட்டும் மிகவும் தேவை ஏற்படும் போது பொருட்கள் வாங்க உரிய காரணத்துடன் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் சீர்காழி பகுதியில் ஊரடங்கு உத்தரவை சிலர் மதிக்காமல் மிகுந்த அலட்சியபோக்குடன் இருசக்கரவாகனங்களில் வீதிகளில் உலாவருகின்றனர். சீர்காழி போலீசார் கடுமையாக எச்சரித்து, வழக்குபதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் சிலர் எதை பற்றியும் சிந்திக்காமல் சுற்றுகின்றனர்.
பெரும்பாலும் இளைஞர்கள் அதிவேக இருசக்கர வாகனங்களில் இருவர், மூவர் என நகரில் சுற்றி திரிவதை வீடியோ எடுத்து அதனை தங்களது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டசாக பதிவிட விரும்புகின்றனர்.
சில இளைஞர்கள் நகரில் அதிவேகமாக ரேஸ் விடுகின்றனர். ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவரும் போலீசார் உத்தரவுகளை மதிக்காமல் சுற்றிவரும் நபர்களை கட்டுப்படுத்த சிரமப்படுகின்றனர். எனவே இதுபோன்ற அதிவேக மோட்டார் சைக்கிளில் வரும் இளைஞர்களை கைது செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.