

சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் பத்திரப்பதிவு துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட துறை தலைவர் விளக்கம் அளித்து இருந்தார்.
அதில் தமிழகத்தில் உள்ள 578 சார்பதிவாளர் அலுவலகத்தில் 155 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி உள்ளதாகவும் 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக 77 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் இவர்களில் 2 பேர் தண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை நீதிபதி கிருபாகரன் ஏற்க மறுத்தார். இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு குறைவான தொகைதான் பறிமுதல் செய்யப்பட்டதா என கேள்வி எழுப்பினார். லஞ்ச ஒழிப்பு துறைக்கும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து பத்திரப்பதிவுத்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் மாநிலம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் ரொக்க பரிமாற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு கட்டணம் செலுத்துவோர் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும். ரொக்கமாக பண பரிமாற்றம் செய்ய முடியாது.
இதன் மூலம் ஊழல் முறைகேடு நடைபெறுவது தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே சொத்து ஆவணங்களை பதிவு செய்வதில் பழைய முறை கடைப்பிடிக்கப்பட்டதால் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்து வந்தன. மேலும் அதிக அளவிலான கோப்புகளை பாதுகாக்க வேண்டி இருந்தது.
இந்த சிரமங்களைகளையும் வகையில் கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி முதல் இணைய தளம் மூலம் சொத்துக்களை பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களும் இணையதள முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.