

காஷ்மீர் புலவாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி 26-ந் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை வான் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் டெல்லியில் இந்திய விமானப்படை சார்பில் மறைந்த மார்ஷல் அர்ஜன் சிங் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி ‘2040-ல் விண்வெளி சக்தி; தொழில்நுட்பத்தின் தாக்கம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாலகோட் தாக்குதலில் நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்கள் மூலம் மிகச்சரியாக இலக்கு தாக்கப்பட்டது. மிக்-21, பைசன்ஸ் மற்றும் மிராஜ்-2000 போர் விமானங்களை நாம் மேம்படுத்துவதன் மூலம் அடுத்தடுத்த நிகழ்வுகளில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
இதன்மூலம் அடுத்த 2 முதல் 4 ஆண்டுகளில் தொழில்நுட்பம் மேலும் நமக்கு சாதகமாக மாறும். இது 2002-ம் ஆண்டு நடைபெற்ற பராகராம் சம்பவத்தின்போது நடைபெற்றதைப்போல இருக்கும்.
நமது ராணுவத்தின் அனைத்து படைகளையும் விட நம்மை தான் தொழில்நுட்பம் மிகவும் பாதிக்கிறது. தரையில் உள்ள படைகள் குறிப்பாக வீரர்களுடன் போரிடும்போது கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் கருவிகளை இயக்குகிறார்கள். ஆனால் போர் விமானத்தில் இது மிகச்சிறிய கருவிகளாக இருக்கும்.
மோசமான வெப்பநிலை மற்றும் காற்றழுத்த நிலைமை ஆகியவற்றையும் பொருத்ததாக இது இருக்கும். தொழில்நுட்ப மாற்றத்திலும் விமானப்படையின் சக்தி மிகவும் பிரச்சினைக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.