சித்துவின் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு- இந்து அமைப்பு அறிவிப்பு

இம்ரான் கான் பதவியேற்பில் பங்கேற்ற சித்துவின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக இந்து அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. #NavjotSinghSidhu
சித்துவின் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு- இந்து அமைப்பு அறிவிப்பு
Published on

லக்னோ:

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் சமீபத்தில் பதவியேற்றார்.

இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து மட்டுமே பங்கேற்றார். கபில்தேவ், கவாஸ்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற சித்து அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டி தழுவினார். இதுமிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

பஞ்சாப் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங்கும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி தழுவியதை சித்து தவிர்த்திருக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.

பா.ஜனதாவினர் சித்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இம்ரான் கான் பதவியேற்பில் பங்கேற்ற சித்துவின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக இந்து அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரிய பஞ்ரங் தளம் கட்சியின் ஆக்ரா பிரிவு தலைவர் சஞ்சய் ஜாட் இதுதொடர்பாக கூறியதாவது:-

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் சித்து பங்கேற்றதன் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டார். அவரது தலையை யாராவது வெட்டிக் கொண்டுவந்தால் அவருக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையே பீகார் மாநிலத்தில் சித்துவுக்கு எதிராக கோர்ட்டில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது. #NavjotSinghSidhu

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com