மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவுக்கு ஜாமீன் மறுப்பு - அமெரிக்க கோர்ட்டு உத்தரவு

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணாவுக்கு ஜாமீன் வழங்க அமெரிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.
மும்பை தாக்குதல், ராணா
மும்பை தாக்குதல், ராணா
Published on

வாஷிங்டன்:

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தாஜ் ஓட்டல், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர். 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவர் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற பயங்கரவாதி தஹாவூர் ராணா. அமெரிக்காவில் வேறு ஒரு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து, இந்தியா கேட்டுக்கொண்டதின் பேரில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் தஹாவூர் ராணா ஜாமீன் கேட்டு அமெரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் வழங்க பிணையாக 15 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11 கோடி) தருவதாக அவர் கோர்ட்டில் கூறியிருந்தார்.

எனினும் ராணாவுக்கு ஜாமீன் வழங்க அமெரிக்க அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜாமீன் வழங்கினால் ராணா இந்தியாவில் மரண தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக வேறு நாட்டுக்கு சென்று தலைமறைவாகி விடுவார். இது வெளி விவகாரங்களில் அமெரிக்காவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என கோர்ட்டில் அமெரிக்க அரசு தரப்பு வக்கீல் கூறினார். இதையடுத்து கோர்ட்டு ராணாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து விட்டது.

பாகிஸ்தானில் பிறந்த ராணா அங்கு உள்ள ராணுவ மருத்துவ கல்லூரியில் படித்தவர் ஆவார். மேலும் பாகிஸ்தான் ராணுவத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி உள்ளார். தற்போது கனடா நாட்டு குடியுரிமை வைத்து உள்ள அவர் சிகோகாவில் தொழில் செய்து வந்து உள்ளார்.

7 மொழிகள் சரளமாக பேசும் அவர் இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று உள்ளார். ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதால் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்திவரப்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com