பத்ரிநாத் கோவில் நடை திறப்பு- 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் நடை 6 மாதத்திற்கு பிறகு இன்று அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். #BadrinathTemple #CharDhamYatra
பத்ரிநாத் கோவில் நடை திறப்பு- 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
Published on

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ளது பத்ரிநாத் கோவில். இமயமலைத் தொடரில் கர்வால் மலையில் அமைந்துள்ள இந்த விஷ்ணு கோவில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் சார்தாம் யாத்திரை மேற்கொள்ளும் 4 புனித தலங்களில் இக்கோவிலும் ஒன்று. 

நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். 

அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு இன்று அதிகாலை 4.15 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க கோவில் நடை திறக்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோவில் நடையை தலைமை பூசாரி ஈஸ்வரி பிரசாத் நம்பூதிரி திறந்தார். அப்போது கோவில் பூசாரிகள், நிர்வாகிகள் மற்றும் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆளுநர் பேபி ராணி மயூர்யா, முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் போன்ற முக்கிய பிரமுகர்களும் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில், பத்ரிநாத் விஷ்ணு கோவில் மற்றும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய அம்மன் கோவில்களுக்கான சார்தாம் யாத்திரை அட்சய திருதியை தினத்தில் (மே 7) தொடங்கியது. அன்றைய தினம் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு தொடங்கிய நிலையில், இன்று பத்ரிநாத் விஷ்ணு கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. 

யாத்ரீகர்கள் முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்தி விட்டு அதன்பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்துவிட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு சார்தாம் யாத்திரையை நிறைவு செய்வார்கள். #BadrinathTemple #CharDhamYatra

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com