

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மொகமது அசாருதீன். இவர் மொராதாபாத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார்.
இவர் ஐதராபாத் போலீஸ் கமிஷனர் எம். மகேந்தர் ரெட்டியை கடந்த வாரம் சந்தித்தார். அப்போது தன்னைப் பற்றி வாட்ஸ்அப்பில் அவதூறு செய்தி பரப்பி வருகிறார்கள். செய்திகளை பரப்பும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து துணை கமிஷனர் லிம்பா ரெட்டி இன்று கூறுகையில் ‘‘அசாருதீன் புகார் குறித்து நாங்கள் வழக்கு பதிவு செய்யவில்லை. தகவல் தொழில்நுட்பம் சட்டவிதிகளின் கீழ் இந்த வழக்கு வரவில்லை. ஆசாருதீன் விரும்பினால் இதுகுறித்து அவதூறு வழக்கு வேண்டுமென்றால் பதிவு செய்யலாம்’’ என்றார்.
அசாருதீன் இந்திய அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளிலும், 334 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். சமீப காலமாக இவருக்கும் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் அசாருதீன் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளதாக உள்ளூர் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.