சென்னையில் கடலில் இறங்கி போராட்டம் நடத்துவோம்- அய்யாக்கண்ணு

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னையில் கடலில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.
அய்யாக்கண்ணு
அய்யாக்கண்ணு
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை எதிர்த்தும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதன் பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

உடனடியாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது. இதனை செய்யாவிட்டால் விரைவில் சென்னையில் கடலில் இறங்கி போராட்டம் நடத்துவோம்.

மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 51 சதவீதம் விவசாயம் செய்யப்படவில்லை என்றால் விவசாயிகள் வாங்கிய 3 ஆண்டு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால் இந்த தீர்ப்பை மாநில அரசு செயல்படுத்த மறுக்கிறது. மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதிக்கக் கூடாது. விவசாயிகள் விதை நெல் வாங்கக்கூட பணம் இல்லாமல் தவிக்கின்றனர். மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளை அடிமையாக நினைக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com