பெரியாறு அணை பிரச்சினையில் துரோகம் - பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: அய்யாகண்ணு

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம் என்று அய்யா கண்ணு தெரிவித்தார்.
பெரியாறு அணை பிரச்சினையில் துரோகம் - பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: அய்யாகண்ணு
Published on

கூடலூர்:

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் இழந்த தமிழக உரிமையை திரும்ப பெற வேண்டும், உச்சநீதிமன்றதீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி தேனி மாவட்டத்தில் நடைபயணம் தொடங்கியது.

கூடலூர் அருகே லோயர் கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் 4 நாட்கள் நடைபெறுகிறது. நடை பயணத்தை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெரியாறு அணை பிரச்சினையில் அரசியல் அமைப்பு சட்டப்படி உச்சநீதிமன்றம் சொல்வதை மாநில அரசு கேட்க வேண்டும். கேட்காத பட்சத்தில் 356-வது பிரிவை பயன்படுத்தலாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆனால் பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு செய்வது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. காவிரி பிரச்சினையைப் போலவே முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையிலும் தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்துக்கு அநீதி இழைத்தால் பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிட்டு தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com