ஜனநாயக கடமை குறித்து விழிப்புணர்வு - பொதுத்தேர்தலை போன்று நடந்த மாணவர் தேர்தல்

ஜனநாயக கடமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுத்தேர்தலை போன்று பள்ளி மாணவர் தேர்தல் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கை விரலில் மையிட்டு, ஐ-பேடில் வாக்களித்தனர்.
ஜனநாயக கடமை குறித்து விழிப்புணர்வு - பொதுத்தேர்தலை போன்று நடந்த மாணவர் தேர்தல்
Published on

கோவை காந்திபுரத்தில் உள்ள சுகுணா இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் நிர்வாக குழுவுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர், தலைவி, விளையாட்டு செயலாளர், கலை இலக்கிய செயலாளர் ஆகிய 4 பொறுப்பாளர்கள், நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய அணிகளை கொண்ட 4 அணித்தலைவர் மற்றும் 4 துணை தலைவர்கள் என மொத்தம் 12 பொறுப்புகளுக்கு 38 மாணவ-மாணவிகள் போட்டியிட்டனர்.இவர்கள் சக மாணவர்களிடம் ஆதரவு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வாக்குபதிவு நேற்று நடைபெற்றது.

இதற்காக பள்ளியின் தரைத்தளத்தில் உள்ள அரங்கில் 8 மேஜைகள் போடப்பட்டு, ஒவ்வொன்றிலும் ஐ-பேடு வைக்கப்பட்டிருந்தது. வாக்குபதிவை பள்ளியின் நிறுவனர் லட்சுமி நாராயணசாமி வாக்களித்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் அந்தோணிராஜ், தலை மை ஆசிரியை அனிதா, மழலையர் பள்ளி பொறுப்பாளர் மீரா ஆகியோர் வாக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் வரிசையில் நின்று வாக்களித்தனர். முன்னதாக அவர்களுக்கு பொதுத்தேர்தலில் வைப்பது போல கை விரலில் மை வைக்கப்பட்டது.அதன்பின்னர் அவர்கள், 12 பதவிகளுக்கு போட்டியிடும் மாணவ-மாணவிகளின் புகைப்படங்களை தொட்டு இணைய தளம் மூலம் வாக்களித்தனர். அவர்களில் யாரையும் பிடிக்கவில்லையென்றால் பொதுத்தேர்தலில் உள்ளது போன்று ‘நோட்டா’ வாக்கு பதிவு செய்யும் வசதியும் இருந்தது. ஆனால் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்கவில்லை.

இதுகுறித்து பள்ளி நிறுவனர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா ஆகியோர் கூறியதாவது:-

பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளியில் படிக்கும் போதே அரசியல் அறிவுபெறவேண்டும். தேர்தல் விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம். தேர்தலில் வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை.நாட்டின் நலன் கருதி அதை தவற விடக்கூடாது.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தேர்தலை நடத்தினோம். இதில் 742 மாணவ-மாணவிகள், 86 ஆசிரியர்கள், பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 832 பேர் வாக்களித்தனர். பின்னர் வாக்கு பதிவு எண்ணப்பட்டு, 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com