

சென்னை:
பெங்களூரை சேர்ந்தவர்கள் நூருல்லா கான், நாதிம் அன்வர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த மேலும் 5 பேருடன் சுங்கு வார்சத்திரத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் உள்ள தர்காவுக்கு வந்தனர்.
இன்று காலை அவர்கள் அங்கிருந்து கடம்பத்தூர் ரெயில் நிலையம் செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் புறப்பட்டனர், அகரம் அருகே வந்தபோது கடம்பத்தூரில் இருந்து தனியார் கம்பெனிக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் திடீரென ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஷேர் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது. அதிலிருந்த நூருல்லா கான், நாதிம அன்வர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் உடன் இருந்த முகமது கலீன், சையது ஆசிப், முஸ்தபா அகமது உள்ளிட்ட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.