தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலியா அரசு சம்மதம்

திருப்பனந்தாள், சீர்காழி, மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டுள்ள மேலும் 7 சிலைகள் மீட்கப்பட இருக்கிறது. இந்த சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலியா அரசு சம்மதம்
Published on

சென்னை:

தமிழக கோவில்களில் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று விற்பனை செய்யப்பட்ட சாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 3 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது மேலும் 7 சாமி சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சிலைகளை மீட்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நேற்று முன்தினம் சென்னை கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சூசன்கிரேஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்து சமயஅறநிலையத்துறை சார்பில் இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.

ஆனால், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

சுமார் 1 மணி நேரம் இந்தக்கூட்டம் நடந்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் 7 சிலைகள், தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பதற்கான ஆதாரங்களை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆவணங்களாக இந்தக்கூட்டத்தில் எடுத்து வைத்தார்.

ஆவணங்களை பார்வையிட்ட ஆஸ்திரேலிய அதிகாரிகள் சிலைகளை திருப்பிக்கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டனர்.

விரைவில் 7 சிலைகளையும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டுக்கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 7 சிலைகள் பற்றிய விவரங்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.

அதன் விவரம் வருமாறு:-

திருப்பனந்தாள், சீர்காழி, மயிலாடுதுறை

1. குழந்தை வடிவிலான நின்ற நிலையில் இருக்கும் சம்பந்தர் பஞ்சலோகசிலை - சீர்காழி சாயவனம் சிவன் கோவிலில் உள்ள சிலையாகும். 1,300 ஆண்டுகள் பழமையான இந்த சிலை ரூ.75 லட்சம் மதிப்புடையது.

2. நடனமாடும் சம்பந்தர் சிலை - ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சிலை ரூ.4.59 கோடி மதிப்புடையது. தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே இருக்கும் மானம்பாடி கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி கோவிலிருந்து இந்த சிலை திருடப்பட்டது.

3. துவாரபாலகர் கல்சிலைகள் -2, திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர், மூன்றீஸ்வர உடையார் சிவன்கோவிலில் திருடப்பட்ட சிலைகள் ஆகும். 1,200 ஆண்டுகள் பழமையான இந்த சிலைகளின் மதிப்பு ரூ.4.98 கோடியாகும்.

4. நந்தி கல்சிலை - 1,100 ஆண்டுகள் பழமையான இந்த சிலை மயிலாடுதுறை அருகேயுள்ள கொல்லுமாங்குடி கிராமத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலில் இருந்து இந்த சிலை திருடப்பட்டிருந்தது.

5. ஆறுமுகம் கல்சிலை - தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகில் உள்ள மானம்பாடி கிராமத்தில் இருக்கும் நாகநாத சுவாமி கோவிலில் திருடப்பட்ட சிலையாகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சிலை ரூ.1.32 கோடி மதிப்புடையதாகும்.

6. பத்ரகாளி சிலை - 900 ஆண்டுகள் பழமையான இந்த சிலை மயிலாடுதுறை அருகேயுள்ள கொல்லுமாங்குடி கிராமத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலில் இருந்து திருடப்பட்டிருந்தது.

இந்த சிலை கடத்தல் வழக்கில் அமெரிக்கா வாழ் இந்தியர் சுபாஸ் சந்திர கபூர், மும்பையை சேர்ந்த வல்லப பிரகாஷ், ஆதித்த பிரகாஷ், சஞ்சீவி அசோகன், தஞ்சாவூர் கரந்தட்டான்குடியைச் சேர்ந்த ஊமைத்துரை, அண்ணாதுரை, லட்சுமி நரசிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மும்பையைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரிசாமி ஆகியோர் இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com