கோப்பு படம்
கோப்பு படம்

தக்கலை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல்

தக்கலை அருகே புத்தாண்டையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

நாகர்கோவில்:

குமாரபுரம் கைக்கோடு பகுதியை சேர்ந்தவர் விபின் (வயது 27). இவர் மார்த்தாண்டம் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வானத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

விபத்துக்களை தடுக்கும் விதமாக புத்தாண்டையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தக்கலை புலிபணம் பகுதியில் விபின் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 2 வாலிபர்கள் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விபின் ஒதுங்கி நிற்குமாறு கூறினார். இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அந்த 2 வாலிபர்களும் விபினை சரமாரி தாக்கினார்கள்.

இதையடுத்து பாதுகாப்புக்கு அருகில் நின்ற போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் பிடிக்க முயன்றனர். போலீசார் பிடியில் இருந்து 2 வாலிபர்களும் தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அந்த வாலிபர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டலும் விடுத்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

இதுகுறித்து தக்கலை போலீசில் விபின் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் போலீஸ் காரர் விபினை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த மகேஷ், கலைச்செல்வன் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com