

திருச்சி:
சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர். இவர் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழமை வாய்ந்த சிலைகளை கடத்தி வெளிநாடுகளில் விற்பனை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நாமக்கல்லை சேர்ந்த யுவராஜா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலூர் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
திருச்சி சிறையில் இருந்த யுவராஜாவுக்கும், சுபாஷ்கபூருக்கும் இடையே நேற்று மாலை சிறைக்குள் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த யுவராஜா, சுபாஷ் கபூரை சரமாரியாக தாக்கினார். இதனை கண்ட சிறை வார்டன்கள் ஓடி சென்று இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews