

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகள் மறுநாள் டெல்லியில் நடத்தப்பட்டன.
அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து நேற்று முன்தினம் அஸ்திகள் சேகரிக்கப்பட்டன. அந்த அஸ்திகளை கரைக்கும் பணி நேற்று தொடங்கியது.
உத்தரபிரதேசத்தில் நேற்று கங்கையில் வாஜ்பாயின் அஸ்தியை அவரது வளர்ப்பு மகள் நமீதா உறவினர்களுடன் சென்று கரைத்தார். அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் யோகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் வாஜ்பாய் அஸ்தியை 100 நதிகளில் கரைக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி வாஜ்பாய் அஸ்திகள் பிரிக்கப்பட்டு 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 100 நதிகளில் வாஜ்பாய் அஸ்தி நாளை (செவ்வாய்க்கிழமை) கரைக்கப்பட உள்ளது.