

சென்னை:
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தி.நகர் பாண்டி பஜாரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நவீன நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரையும், தணிகாசம் சாலை முதல் போக் சாலை வரை 1,450 மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக நடைபாதை வளாகம் அமைக்கம் பணிகள் முடிந்துள்ளது.
இந்த நடைபாதை வளாகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 13-ந்தேதி திறந்து வைத்தார்.பொதுமக்கள் வசதிக்காக சாலையின் இருபுறமும் 10 மீட்டருக்கு நடைபாதை, இணையதள வசதி, நவீன இருக்கைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் வசதி, ஸ்மார்ட் சைக்கிள், பேட்டரி கார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைபாதை வளாகத்தின் இருபுறமும் கார், மோட்டார் சைக்கிள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கார், மோட்டார் சைக்கிள்களுக்கு கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி நடைபாதை வளாகத்தில் நீண்ட நேரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கும் வகையில் காருக்கு மணிக்கு 20 ரூபாய் கட்டணமும், மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5 ம் கட்டணமாக வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பார்க்கிங் மேலாண்மை திட்டத்தின்படி ‘ஸ்மார்ட் போனில் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம். அல்லது அங்குள்ள பணியாளர்களிடம் நேரடியாக கட்டணம் செலுத்தலாம்.
வாகனங்கள் எவ்வளவு நேரம் நிறுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் துல்லியமாக கணக்கிடப்படும்.
நடைபாதை வளாகத்தில் ஒரு மணி நேரத்துக்கு இலவச மாக ‘வைஃபை’ வசதியை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன் பின்னர் மற்ற நேரங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.