அல்பேனியாவில் கடுமையான நிலநடுக்கம் - 8 பேர் பலி, 300 பேர் காயம்

அல்பேனியா நாட்டில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 8 பேர் பலியாகினர் மற்றும் சுமார் 300 நபர்கள் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிடம்
நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிடம்
Published on

டிரானா:

ஐரோப்பா கண்டத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது அல்பேனியா. இதன் தலைநகர் டிரானாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது.

அல்பேனிய கடற்கரை பகுதிகளில் உணரப்பட்ட இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின.  வீட்டின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதால் மக்கள் அப்பகுதி மக்கள் அனைவரும் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். டர்ரெஸ் எனும் நகரில் உணவகம் ஒன்று முற்றிலும் இடிந்து விழுந்து நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

வடக்கு பகுதியில் உள்ள தமனே நகரில் மின்வாரியமும், 3 அடுக்குமாடி குடியிருப்புகளும் கடுமையான சேதம் அடைந்தன. நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com