

யாங்கூன்:
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினேவில் சிறுபான்மை ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ நடவடிக்கைக்கு பயந்து சுமார் 87 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லீம்கள், வங்கதேசத்திற்கு தப்பியோடி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று ராகினேவில் உள்ள 24 சோதனைச்சாவடிகள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பின்னர் அப்பகுதியில் உள்ள ராணுவ தளத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து, போலீசாருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் ஐந்து போலீசாரும், ஏழு கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.