

திருப்பூர்:
தமிழகத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்க தெரியாத 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கிடும் நோக்கில், ‘கற்போம்-எழுதுவோம்‘ இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இவர்களுக்கு எழுத்து தேர்வு, ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தாமரை கண்ணன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 580 மையங்களில் 11 ஆயிரத்து 600 பேர் இதன்கீழ் பயின்று வந்தனர். இது கற்போரின் குறைந்தபட்ச கற்றல் அளவை மதிப்பீடு செய்யும் நிகழ்வாகும்.
கற்போரின் விருப்பத்திற்கிணங்க பள்ளியில் அமைக்கப்பட்ட மையங்களிலும் அவரவர் வீடுகளிலும் பணியிடங்களுக்கும் சென்று மதிப்பீடு செய்யப்பட்டது. படித்தல், எழுதுதல், எண்ணறிவு ஆகிய திறன்களின் அடிப்படையில் மதிப்பீடு நடந்தது. அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இன்று வரை முகாம் நடக்கும் என்றார்.