

பாலையூர்:
நாகை மாவட்டம் குத்தாலம் மீனாங்குளம் மலையன் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் அனுஷா(வயது20). செல்வம் வெளிநாட்டில் இருந்து வருகிறார். இந்தநிலையில் அனுஷாவும், அவரது அம்மாவும் குத்தாலத்தில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டுக்கு வில்லியநல்லூர் தெற்குதெருவை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சதீஷ்குமார் அடிக்கடி வந்து போவதாக தெரிகிறது. இதனை அனுஷா தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், அனுஷாவுக்கு கொலைமிரட்டல் விடுத்து, அவரை குழவி கல்லால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அனுஷா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அனுஷா கொடுத்த புகாரின் பேரில் குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.