

கவுகாத்தி:
பின்லாந்தில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (20 வயதுக்கு உட்பட்டோர்) இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலக அளவிலான தடகளத்தில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்த முதல் இந்திய மங்கை என்ற புதிய சரித்திர சாதனையை அவர் படைத்தார்.
விவசாய குடும்பத்தை சேர்ந்த ஹிமாதாசின் சொந்த ஊர், அசாம் மாநிலம் நாகாவ்ன் மாவட்டத்தில் உள்ள திங் கிராமம் ஆகும். உடன் பிறந்தவர்கள் 4 பேர். ஹிமா தாசின் மகத்தான வெற்றியால் அந்த கிராமமே உற்சாகம் பூண்டுள்ளது.
இதுதொடர்பாக ஹிமா தாஸ் கூறுகையில், தேசத்திற்காக பதக்கத்தை கொண்டு வருவது மிகப்பெரிய சாதனையாகும். இந்திய மக்களுக்கு இந்த பரிசை அளிப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. அடுத்து வரும் ஆசிய விளையாட்டிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிபேன்’ என்றார்.
தங்கம் வென்ற வீராங்கனை ஹிமாதாசுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாசுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது.
அசாம் முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் ஹிமா தாசுக்கு50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்து அதற்கான உத்தரவை வெளியிட்டார்.
ஏற்கனவே முன்னாள் முதல் மந்திரி தருண் கோகோய் ஒரு லட்சமும், அசாம் அத்லெடிக் அசோசியேஷன் 2 லட்சமும், முன்னாள் மந்திரி கவுதம் ராய் ஒரு லட்சமும் அளித்துள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது. #HimaDas #WorldJuniorAthletics