பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்கள் திருமணத்துக்கு 10 கிராம் தங்கம் பரிசு - அசாம் அரசு அறிவிப்பு

பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்தால் 10 கிராம் தங்கம் பரிசாக அளிக்கப்படும் என அசாம் அரசு இன்று அறிவித்துள்ளது.
சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்
Published on

கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் ஆண்டுதோறும் சுமார் 3 லட்சங்கள் திருமணங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் திருமணங்கள் மட்டுமே முறைப்படி பதிவு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்யும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அசாம் மாநில அரசு இன்று புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

‘அருந்ததி தங்க திட்டம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்த சான்றிதழை காண்பிக்க வேண்டும். அரசு வழங்கும் 10 கிராம் தங்கத்தின் விலைக்கு நிகரான பணம் புதுமணப்பெண்ணின் பெயரில் வங்கியில் செலுத்தப்படும்.

அதன்படி, இன்றைய தங்கம் விலை நிலவரப்படி இதற்கான தொகை 30 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பலன்பெற விரும்பும் மணமகள் 18 வயதானவராகவும் மணமகன் 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.

மணமகள் குடும்பத்தாருக்கு இதற்கான அதிகபட்ச ஆண்டு வருமான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் 800 கோடி ரூபாய் செலவாகும் என அசாம் அரசு குறிப்பிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com