

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மழை பாதிப்பு குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழையால் அசாம் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் 1.33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 243 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சில ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை தாண்டி உள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் 162 நபர்கள், 40 கால்நடைகள் மீட்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிகிச்சை அளிப்பதற்கு 5 மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.