குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
Published on

செஞ்சி:

செஞ்சியை அடுத்த வல்லம் ஒன்றியம் பெரும்பூண்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றியதால், கடந்த சில நாட்களாக அந்த கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் கிராம மக்கள், அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீரை பிடித்து வந்து, அதை பயன்படுத்தி வருகின்றனர்.

குடிநீர் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பெரும்பூண்டியில் உள்ள செஞ்சி-நெசூர் சாலையில் காலிகுடங்களுடன் நேற்று காலை திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன.

இது குறித்து தகவல் அறிந்த வல்லம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் புருஷோத்தமன் மற்றும் வளத்தி இன்ஸ்பெக்டர் குமரபாலன், சப்-இன்ஸ்பெக்டர் சாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள், ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com