

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்துக்கு பதிலடி கொடுப்போம் என்றும் மிரட்டியது. அதன் பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதேபோல் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவிய 2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இவ்வாறு விமானப்படை தாக்குதல் தொடங்கி உள்ளதால் இரு நாடுகளில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் விமானங்கள் அடுத்தடுத்து எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருவதால், போர் பதற்றம் உருவாகி உள்ளது.