பென்னாகரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

பென்னாகரம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் முள்ளுவாடி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகள் பவித்ரா. சம்பவத்தன்று இவர் தனது மடிக்கணினியை வீட்டில் வைத்து விட்டு அருகில் உள்ள வீட்டுக்கு சென்று பேசி கொண்டு இருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த போது மடிக்கணினியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.

இதையடுத்து கிராமமக்கள் விரைந்து வந்தபோது ஒரு வாலிபர் சந்தேகப்படும் வகையில் நடந்து சென்றார். இதையடுத்து கிராமமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரி, அந்த நபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் பென்னாகரம் அருகே உள்ள எட்டிக்குழி கிராமத்தை சேர்ந்த மஞ்சு (வயது 29) என்பதும், பவித்ராவின் வீட்டில் மடிக்கணினியை திருடியது தெரியவந்தது.

அதேபோல் நல்லாம்பட்டியை சேர்ந்த கலைவாணி என்பவருடைய வீட்டில் புகுந்து நகையை திருடியதும், பென்னாகரம் பகுதியில் பலவேறு இடங்களில் வீடுகளில் புகுந்து நகையை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மஞ்சுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மடிக்கணினி, 4¾ பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com