

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக திருட்டுச் சம்பவங்கள் நடந்து வந்தது. குறிப்பாக மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வந்த திருட்டை அடுத்து கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் புது வியூகங்கள் அமைத்து கொள்ளையர்களை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது கட்டிமாங்கோட்டை சேர்ந்த ராஜேஷ்வினித் (வயது 23), ராதாபுரம் சுனாமி காலனியை சேர்ந்த ஆன்ரோ சதீஷ் (23) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் ராஜேஷ்வினித், ஆன்ரோ சதீஷ் இருவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 15 புவன் நகை மீட்கப்பட்டது. பிடிபட்ட இருவரையும் மார்த்தாண்டம் போலீசார் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.