

அணைக்கட்டு:
வேலூர் அடுத்த பொய்கை முல்லை நகரை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 24). கடந்த 2014-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த இவர், தற்போது அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், 2 மாத விடுமுறையில் 4 நாட்களுக்கு முன்பு சந்தோஷ் சொந்த ஊருக்கு வந்தார்.
நேற்று வீட்டில் இருந்த சந்தோஷ் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் இன்று காலை, அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
தகவலறிந்து வந்த விரிஞ்சிபுரம் போலீசார், ராணுவ வீரரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.