காட்பாடி அருகே தூக்குப்போட்டு ராணுவ வீரர் தற்கொலை

பதவி உயர்வு கிடைக்காததால் மனமுடைந்த ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடி அருகே தூக்குப்போட்டு ராணுவ வீரர் தற்கொலை
Published on

வேலூர்:

காட்பாடி தாலுகா பிரம்மபுரம் கார்சலாம்பட்டரையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சிவராமன் (வயது 35). இவருடைய மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ரிசிலா (3) என்ற மகள் உள்ளார். 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வரும் சிவராமன் தற்போது ஜம்மு-காஷ்மீர் லே-லடாக் பகுதியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் ஒரு மாத விடுமுறைக்காக கடந்த 20-ந் தேதி சொந்த ஊருக்கு வந்தார்.

ராணுவத்தில் சிவராமனுக்கு பதவி உயர்வு அளித்திருக்க வேண்டும் என்றும், ஆனால் அவருக்கு பதவி உயர்வு அளிக்காமல் காலதாமதம் செய்ததாகவும், அதுகுறித்து அவர் அவருடைய குடும்பத்தினர், நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதன் காரணமாக சிவராமன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவராமன், குடும்பத்தினருடன் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். அப்போது, படுக்கையறையில் குழந்தை ரிசிலாவை தூங்க வைத்து விட்டு அவர் மட்டும் ஹாலில் அமர்ந்திருந்தார். வெகுநேரமாகியும் அறைக்கு தூங்க வராததால் சந்தேகம் அடைந்த கலைச்செல்வி ஹாலுக்கு சென்று பார்த்தார். அங்கு குழந்தைக்காக கட்டியிருந்த ஊஞ்சல் கயிற்றில் சிவராமன் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி உடனடியாக அக்கம், பக்கத்தினர் உதவியுடன் சிவராமனை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதையடுத்து சிவராமன் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து கலைச்செல்வி காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பதவி உயர்வு கிடைக்காததால் ராணுவவீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கார்சலாம்பட்டரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com