

கற்பழிப்பு வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று அறிவித்தது. இதனால் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பயங்கர கலவரம் வெடித்தது. இதில் பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது.
இந்த கலவரங்களில் சுமார் 30-க்கும் அதிகாமானவர்கள் பேர் பலியாகி உள்ளனர். இந்த கலவரங்கள் தொடர்பாக 1000-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பஞ்ச்குல்லா போலீஸ் துணை ஆணையாளரை அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கூடினர். அதைத்தொடர்ந்து, அப்பகுதியில் போலீசாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் கூடியிருக்கும் தேரா சச்சா அமைப்பின் ஆதரவாளர்களை கலைந்து செல்லுமாறு ராணுவத்தினர் வலியுறுத்தினர். அதன் காரணமாக சிலர் கலைந்து சென்றனர். இருப்பினும், பலர் கலைந்து செல்லாமல் உள்ளேயே முகாமிட்டுள்ளனர்.
அதைத்தொடர்ந்து, அவர்களை வெளியேற்றுவதற்காக ராணுவம் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் உள்ளே நுழைந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த தகவலை ராணுவ அதிகாரிகள் மறுத்தனர். தேரா பகுதியில் வன்முறை ஏற்படாமல் அமைதியை நிலைநாட்டுவதற்கு தான் ராணுவம் முன்னுரிமை கொடுக்கும் என மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.