தாஜ்மஹால் கோவில் அல்ல; நினைவு சின்னம்தான்: கட்டிட கலைத்துறை கோர்ட்டில் விளக்கம்

தாஜ்மஹாலுக்குள் எந்தவிதமான கோவிலும் இல்லை. மன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் என ஆக்ரா நீதிமன்றத்தில் கட்டிட கலைத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தாஜ்மஹால் கோவில் அல்ல; நினைவு சின்னம்தான்: கட்டிட கலைத்துறை கோர்ட்டில் விளக்கம்
Published on

ஆக்ரா:

ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் பளிங்கு கற்களால் கட்டி எழுப்பப்பட்டுள்ள தாஜ்மஹால் உலகப் புகழ்பெற்றது.

இந்தியாவை ஆண்ட முகலாய அரசர் ஷாஜகானின் 3-வது மனைவி மும்தாஜ். மன்னர் ஷாஜகானுக்கு இளம் மனைவியான மும்தாஜ் மீது அளவற்ற காதல்.

மும்தாஜ் 14-வது குழந்தைபேற்றின் போது இறந்துவிட்டார். அவரது மறைவை தாங்கமுடியாத மன்னன் தனது காதலின் நினைவாக தாஜ்மஹாலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் தாஜ்மஹால் காதலின் சின்னமாக பார்க்கப்படுகிறது.

தாஜ்மஹாலின் அழகு பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கானவர்கள் பார்த்து ரசித்து இருக்கிறார்கள்

இதை பார்வையிட்ட சுவாமி விவேகானந்தர் கூறும்போது:-

இந்த கட்டிடத்தின் சலவை கல்துண்டு ஒன்றை பிழிய முடியுமானால் அதில் அந்த அரசனின் காதலும், சோகமும் கொட்டும் என்று குறிப்பிட்டார்.

அழகு நிறைந்த இந்த கட்டிடம் புராதனமான சிவன் கோவில் என்ற சர்ச்சையும் இருந்து வருகிறது. பேராசிரியர் ஓக் என்பவர் தனது ஆய்வு நூலில், இது ஜெய்பூர் மன்னன் ஜெய்சிங்குக்கு சொந்தமான சிவன் கோவில்.

ஷாஜகான் அந்த கோவிலை பிடுங்கிக் கொண்டார். அதை திருப்பிகேட்டு மன்னர் ஜெய்சிங் எழுதிய மடல் இன்றும் இருக்கிறது.

தாஜ்மஹாலின் உள்ளே இதற்கான ஆதாரங்கள் உள்ளன. சில இடங்கள் பாதுகாப்பு என்று கூறி திறக்கப்படாமல் உள்ளது. அவற்றை திறந்து ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெரிய வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் 2015-ம் ஆண்டு 6 வக்கீல்கள் ஆக்ரா கோர்ட்டில் ஒரு வழக்கு போட்டனர். அதில் தாஜ்மஹால் இந்து கோவில் என்றும் அதனுள் வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். பூட்டி வைக்கப்பட்டுள்ள அறைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது இந்திய கட்டிடக் கலை துறை சார்பில் கோர்ட்டில் அளித்துள்ள விளக்கத்தில் தாஜ்மஹாலை கோவில் என்பதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. தாஜ்மஹாலுக்குள் எந்தவிதமான கோவிலும் இல்லை. மன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச்சின்னம். யாருக்கும் வழிபாட்டு உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி செப்-11-ந்தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com