அரவக்குறிச்சி தேர்தல் - ஓட்டுப்பதிவு நாளன்று பாதுகாப்பு பணிக்கு 3,073 போலீசார்

அரவக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவு அன்று பாதுகாப்பு பணியில் 3,073 போலீசார் ஈடுபடுவார்கள் என்று டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா தெரிவித்துள்ளார். #TNAssemblyByElection #AravakurichiByElection
மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பை கலெக்டர் அன்பழகன் தொடங்கிவைத்தார்
மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பை கலெக்டர் அன்பழகன் தொடங்கிவைத்தார்
Published on

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து கரூர் தனியார் கல்லூரியில் வைத்து தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் ஐ.ஜி.சேசாயி, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி, கரூர் எஸ்.பி. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா கூறியதாவது:-

அரவக்குறிச்சி தொகுதியில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், க.பரமத்தி, சின்னதாராபுரம், தென்னிலை ஆகிய 5 காவல் நிலையங்களுக்கு டி.எஸ்.பி. மற்றும் கூடுதல் இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் 159 இடங்களில் 250 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 11 இடங்களில் அமைந்துள்ள 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
ஒரே இடத்தில் 3 வாக்குச்சாவடிகளுக்கு மேல் அந்த மையத்தில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக 42 பேர் கண்டறியப்பட்டு அவர்களிடம் பிணைப்பத்திரங்கள் பெறப்பட்டு காவல் துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொகுதியை கண்காணிக்கும் வகையில் 36 பறக்கும் படைகள், 18 நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 23 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 11 நான்கு சக்கர வாகனம், 17 இரு சக்கர வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அன்று ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார் என 1,773 பேர், 8 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 560 பேர், 3 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் 240 பேர், ஊர்க்காவல் படையினர் 500 பேர் என மொத்தம் 3,073 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை 1950, 100 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என கூறினார்.

மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ கூறுகையில், கரூர் மக்களவை தொகுதி வாக்குகள் எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் 3-வது கட்ட பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கரூர் மாவட்ட போலீசாருடன், கூடுதலாக திருச்சி மாவட்ட போலீசார் 120 பேர் நியமனம் செய்யப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.  #TNAssemblyByElection  #AravakurichiByElection

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com