அறந்தாங்கி, வடகாட்டில் குண்டும், குழியுமான சாலைகளால் விபத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்

அறந்தாங்கி, வடகாட்டில் குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர்.
குண்டும், குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி.
குண்டும், குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி.
Published on

அறந்தாங்கி:

அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்டது தாரணி நகர். இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்நிலையில் தாரணி நகருக்கு செல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளது. சமீபத்தில் அறந்தாங்கி பகுதியில் பரவலாக மழை பெய்தது.

மழைநீர் சாலையில் உள்ள குழியில் நிரம்பி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த குழிக்குள் விழுந்து காயம் ஏற்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகாடு அரசு மருத்துவமனை சாலை கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி வரை இணைப்பு சாலையாக உள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை வடகாடு மருத்துவமனை வரை மட்டுமே ஒரளவுக்கு தார் சாலையாக உள்ளது. அதன் பிறகு கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி வரை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இப்பகுதிகளில் வடகாடு மற்றும் கொத்தமங்கலத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நெல், வாழை, சோளம், கடலை, கரும்பு மற்றும் பூஞ்செடிகளை சாகுபடி செய்துள்ளனர். இந்த சாலையில் மழைக்காலத்தில் சைக்கிளில் கூட தங்களது விவசாய விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாக, விவசாயிகள் கூறினர். மேலும் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை அறுவடை செய்ய அறுவடை எந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி விவசாய பொருட்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு வரும் போது, தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com