

நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது இளம்பெண். இவரது சகோதரரை பார்க்க அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பரான 17 வயது வாலிபர் அடிக்கடி வந்து சென்றார். இதில் அந்த இளம்பெண்ணுடனும் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இளம்பெண்ணை காதலிப்பதாக வாலிபர் ஆசைவார்த்தை கூறினார். இதை இளம்பெண்ணும் நம்பினார். இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி வீட்டில் இருந்த பெண்ணை, வாலிபர் அழைத்துச் சென்று திருமணம் செய்தார். மேலும் தனியாக வீடு எடுத்து அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தினார்.
16 வயது சிறுமியுடன் வாலிபர் ஒருவர் குடும்பம் நடத்துவது பற்றி சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது 16 வயது சிறுமியை வாலிபர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த சிறுமியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதித்தனர். பின்னர் இதுதொடர்பாக அந்த சிறுமி மூலம் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
புகாரில் அந்த சிறுமி, தன்னை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறிய வாலிபர், கட்டாயப்படுத்தி பலமுறை கற்பழித்ததாக கூறி இருந்தார். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தாகுமாரி வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.
பின்னர் அந்த வாலிபர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சிறுவர் சீர்திருத்த ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில் நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த ஜெயிலில் அந்த வாலிபர் அடைக்கப்பட்டார்.