பெண் தொழில் அதிபரின் போராட்டங்களையும் மீறி அன்வர் ராஜா எம்.பி. மகனுக்கு திருமணம் நடந்தது

பெண் தொழில் அதிபரின் போராட்டங்களையும் மீறி ராமநாதபுரம் எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலிக்கு காரைக்குடியில் திருமணம் நடைபெற்றது.
பெண் தொழில் அதிபரின் போராட்டங்களையும் மீறி அன்வர் ராஜா எம்.பி. மகனுக்கு திருமணம் நடந்தது
Published on

காரைக்குடி:

சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா (வயது 35). தொழில் அதிபரான இவர் வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அதில், “நானும், ராமநாதபுரம் எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியும் காதலித்தோம். அதனால் கடந்த 3 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். நானும் முஸ்லிம் மதத்திற்கு மாறினேன்.

சில மாதங்களில் நாசர் அலியின் போக்கு மாறியது. அவரிடம் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறினேன். ஆனால் நாசர் அலி திருமணத்திற்கு மறுத்தார். அதனால் அவரது குடும்பத்தினரிடம் இது பற்றி கூறினேன். முதலில் திருமணம் செய்து வைப்பதாக கூறிய அவர்கள், பின்னர் மறுப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நாசர் அலிக்கும், காரைக்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காரைக்குடியில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. இது குறித்து தகவல் கிடைத்ததும் ரொபினா அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரினார்.

மேலும் திருமணம் நடைபெற்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதுதவிர திருமணம் நடக்க இருப்பதாக கூறப்பட்ட பள்ளிவாசல் நிர்வாகிகளிடமும் அவர் புகார் அளித்தார்.

இந்த நிலையில் திருமணம் நடைபெறுவதாக கூறப்பட்ட பள்ளிவாசலுக்கு நேற்று காலை சென்று அதன் நிர்வாகிகளை சந்தித்து ரொபினா கதறி அழுது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு வேண்டினார். தகவல் அறிந்து போலீசாரும் அங்கு வந்தனர். திடீரென ரொபினா அழுதுகொண்டே பள்ளிவாசல் சுவரில் முட்டினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனைப் பார்த்து அருகில் இருந்த பெண் போலீசார் ரொபினாவை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். அதன்பின் இங்கு திருமணம் நடைபெறாது என்று பள்ளிவாசல் நிர்வாகிகளும் உறுதியளித்தனர்.

ஆனால் காரைக்குடியை அடுத்த அரியக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நாசர் அலிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக ரொபினாவுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு விரைந்து சென்றார். ரொபினா வருவதை அறிந்த திருமண வீட்டாரின் உறவினர்கள் அப்பகுதியின் நுழைவு வாயில் கேட்டை பூட்டினர்.

ஆனால் ரொபினா காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து, திருமணம் நடக்கும் இடத்தை நோக்கி ஓடினார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் அந்த இடத்திலேயே அழுது புரண்டதுடன், போராட்டம் நடத்தினார்.

இருப்பினும் அங்கு நாசர் அலிக்கும், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. நாசர் அலியின் வீட்டினர் துரோகம் இழைத்துவிட்டனர். நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களும் அமைதியாக இருக்கின்றனர், கோர்ட்டு மூலம் எனக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவேன் என்று ரொபினா தெரிவித்தார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com