மும்பை:
மராட்டிய மாநிலத்தின் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாசிக்கில் இருந்து அவுரங்காபாத் செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி இன்று நாசிக்கில் தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் ஏறி அமர்ந்தார். மற்ற பயணிகளும் வந்தனர். அவர்களது உடமைகள் பரிசோதனை செய்யப்பட்டு ஹெலிகாப்டர் பறக்க ஆரம்பித்தது.
ஆனால், பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் ஹெலிகாப்டர் தடுமாறுவதை விமானி உணர்ந்தார். உடனடியாக, ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினார்.
இதுதொடர்பாக தனியார் நிறுவனத்தினர் கூறுகையில், பயணிகள் கொண்டு வந்த உடமைகளின் அழுத்தம் காரணமாக சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது. முதல் மந்திரி பயணம் செய்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. அதன்பின்னர் உடமைகள் எடைகளை குறைத்ததும், முதல் மந்திரி பட்னாவிஸ் அதே ஹெலிகாப்டரில் பயணம் செய்தார், என தெரிவித்தனர்.
முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.