

சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
இதழியல் துறையின் முன்னோடி சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக்கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அரசியல், இதழியல் மற்றும் தமிழர் நலனுக்கு ஆதித்தனார் ஆற்றிய பணிகளுக்கு சிறந்த அங்கீகாரமாக இந்த அறிவிப்பு அமையும்.
பென்னிகுயிக், காலிங்கராயர், ம.பொ.சிவஞானம் ஆகியோரின் பிறந்தநாட்கள் அரசு விழாக்களாகக்கொண்டாடப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.
பெரும்பிடுகு முத்தரையருக்கு மணி மண்டபம் வரவேற்கத்தக்கது. மேலும் திருச்சி விமான நிலையத்திற்கு அவர் பெயரைச்சூட்ட வேண்டும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ஏ.டி.பன்னீர்செல்வம், ஆழியாறு அணைத் திட்டத்தின் மூலவர் பழனிசாமி கவுண்டர் ஆகியோருக்கு மணிமண்டபம், அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் அரசு விழாவாக நடத்தப்படும், கட்டபொம்மனின் தளபதி வீரன் சுந்தரலிங்கத்தின் மணிமண்டபம் சீரமைக்கப்பட்டு நூலகமும் அமைக்கப்படும் போன்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இரட்டைமலை சீனிவாசனாருக்கு மணிமண்டபம், அல்லாள இளையநாயகருக்கு குவிமாடத்துடன் திருவுருவச்சிலை, ஒண்டிவீரனின் மணிமண்டபம் புதுப்பிக்கப்படும் ஆகிய அரசின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்மொழி மற்றும் தமிழ் இனம் மீது தீவிர பற்றுக்கொண்ட சி.பா.ஆதித்தனார், பொது வாழ்விலும் தனது முத்திரையை பதித்தவர். மிகச்சிறந்த கல்வியாளர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், பண்பாளர் என பன்முகம் கொண்டவர். காலம் தாழ்ந்து தமிழக அரசால் எடுக்கப்பட்ட முடிவாயினும் பாராட்டுக்குரியது, போற்றி வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாருக்கு, தமிழக அரசு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்ப்பதோடு அவர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதாக அறிவித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. மேலும் ம.பொ.சி.க்கு அரசு விழா எடுக்க முனைந்திருப்பது அதீத மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.
சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் இட்லி இனியவன், மக்கள் உரிமை கழக முதன்மை செயலாளர் இனியன் ஜான் ஆகியோர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியும் வரவேற்று உள்ளது. #Adithanar