தினமும் 15 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் மகாராஷ்டிரா திரும்புகிறார்கள்: அனில் தேஷ்முக்

ஊரடங்கின் போது சொந்த ஊர் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் மகாராஷ்டிராவுக்கு திரும்பி வருகிறார்கள். தினசரி 15 ஆயிரம் பேர் வருவதாக மாநில உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் தெரிவித்தார்.
அனில் தேஷ்முக்
அனில் தேஷ்முக்
Published on

மும்பை :

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் ஒருநாளுக்கு முன்னதாகவே ஊரடங்கு அமலுக்கு வந்தது.

ஊரடங்கால் தொழில்துறைகள் முடக்கப்பட்டதாலும், பஸ், ெரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டதாலும் மராட்டியத்தில் தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானமின்றி தவித்தனர்.

இதுதவிர கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வந்தனர். அவர்களின் வசதிக்காக ஷராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. மராட்டியத்தில் இருந்து சுமார் 17 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதாக மாநில அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் காரணமாக மகாராஷ்டிராவில் மீண்டும் தொழில்நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. நீண்ட தூர ரெயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து சொந்த ஊர் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் தினமும் சராசரியாக 15 ஆயிரம் பேர் மீண்டும் மராட்டியம் திரும்பி வருவதாக மாநில உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மும்பை, புனே, தானே, நவிமும்பைக்கு தினசரி 11 ஆயிரத்து 500 பேர் வந்து கொண்டு இருக்கிறார்கள். புனே, நாக்பூர், கோண்டியா, நந்துர்பர், கோலாப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு தினசரி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை வருகிறார்கள்.

மராட்டியத்தில் தொழிற்துறை நடவடிக்கைகள் பெரியளவில் தொடங்கியவுடன் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வருவதால் கொரோனா பரவலை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com