171 நாள் காத்திருப்புக்கு பின்னர் ஜெர்மனியில் ஆட்சியமைத்தார் ஏஞ்சலா மெர்கெல்

ஜெர்மனியில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கூட்டணி கட்சிகளால் கிடைத்துள்ள நிலையில், நான்காவது முறையாக வேந்தர் (அரசுத்தலைவர்) பதவிக்கு ஏஞ்சலா மெர்கெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #AngelaMerkel
171 நாள் காத்திருப்புக்கு பின்னர் ஜெர்மனியில் ஆட்சியமைத்தார் ஏஞ்சலா மெர்கெல்
Published on

பெர்லின்:

வலிமையான ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜெர்மனியில் 2005-ம் ஆண்டு முதல் ஏஞ்சலா மெர்க்கல் வேந்தராக பதவி வகித்து வருகிறார். 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.

இந்த நிலையில் அந்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் ஏஞ்சலா மெர்க்கலின் பழமைவாத கட்சி (சி.டி.யூ.) மற்றும் ஹோர்ஸ்ட் சீஹோபரின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (சி.எஸ்.யூ.) ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

மெர்க்கலுக்கு அதிக ஆதரவு இருந்தாலும், 246 இடங்களையே அந்த கூட்டணி கைப்பற்றியது. மேலும், கடந்த முறை அந்த கூட்டணி பெற்ற ஓட்டுகள் 41.5 சதவீதத்தில் இருந்து 32.9 சதவீதமாக சரிந்தது.

அதே நேரம், அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பான விவகாரத்தில் ஏஞ்சலா மெர்க்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழமைவாத கூட்டணியில் இருந்து தேர்தலுக்கு முன்பே விலகிய எஸ்.பி.டி. கட்சி 153 இடங்களை கைப்பற்றியது. ஏ.எப்.டி. 94 இடங்களிலும், எப்.டி.எப். 80, டி லிங்கே, 69, கிரீன் கட்சி 67 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியிலேயே முடிந்தது. இதனால், புதிய அரசு அமைக்க முடியாமல் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

இதனால் சர்ச்சைகள் எழுந்த நிலையில், தேவைப்பட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயார் என வேந்தர் ஏஞ்சலா மெர்க்கல் அதிரடியாக அறிவித்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் மெர்கெலுக்கு ஆதரவளிக்க தயார் என எஸ்.பி.டி கட்சி அறிவித்தது. இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்ற கீழ் சபையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் சி.எஸ்.யூ - சி.டி.யூ, எஸ்.பி.டி உறுப்பினர்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். 355 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 364 உறுப்பினர்கள் ஆதரவு மெர்கெலுக்கு கிடைத்தது.

171 நாள் காத்திருப்புக்கு பின்னர் ஆட்சியமைத்துள்ள மெர்கெல் விரைவில் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் வேந்தராக பொறுப்பேற்றுக்கொள்வார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #AngelaMerkel #Germany

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com