அடிப்படை வசதிகள் கேட்டு வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஆண்டிப்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகள் கேட்டு வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
Published on

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பிடம் இல்லாமல் உள்ளது. இது குறித்து மாணவர்கள் பலமுறை கல்லூரி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ- மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், கல்லூரி முதல்வர் சுரேஷ் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்கவில்லை. கழிப்பிட வசதி இல்லாததால் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக இன்று 12 மணிக்குள் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இல்லை எனில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என தெரிவித்தனர்.

இதனால் கல்லூரி வளாகம் முன்பு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. மாணவ-மாணவிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியபடி இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com