கோப்பு படம்
செய்திகள்
பட்டபகலில் குழந்தையை கடத்திய ஆந்திர பெண் கைது
மூணாறு அருகே பட்டபகலில் குழந்தை கடத்திய ஆந்திர பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூணாறு:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா கிடவெட்டி பகுதியை சேர்ந்தவர் முஜீப். இவரது மனைவி அஜிமி. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. முஜீப் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அஜிமி எர்ணாகுளத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் குழந்தையை அஜிமியின் தாயார் கவனித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த குழந்தையை ஒரு பெண் கடத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அஜிமியின் தாய் அவரை விரட்டி சென்றார். குழந்தையை விட்டு விட்டு அந்த பெண் தப்பி விட்டார்.
இது குறித்து தொடுபுழா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்தியதாக ஆந்திரா மாநிலம் கோட்டூர் பகுதியை சேர்ந்த ஷமீம்பீவி (60) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

