உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதல் பெண் கவர்னராக ஆனந்திபென் பதவி ஏற்றார்
லக்னோ:
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் கவர்னராக குஜராத் முன்னாள் முதல் மந்திரி ஆனந்திபென் பட்டேல் இன்று பதவி ஏற்றார்.
உத்தரப்பிரதேசம், திரிபுரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரவிட்டார்.
பதவியேற்பு விழாவில் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், முன்னாள் கவர்னர் ராம் நாயக் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் கவர்னராக பொறுப்பேற்றவர் ஆனந்திபென் என்பதும், வெள்ளையர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பின்னர் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்படாத காலக்கட்டத்தில் 15-8-1947 முதல் 2-3-1949 வரை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய ஒன்றிணைந்த மாகாணத்தின் கவர்னராக ’கவிக்குயில்’ சரோஜினி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

