

சென்னை:
ஜெயலலிதாவின் மகள் என்று தம்மை உரிமை கொண்டாடி வரும் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் வாரிசு என்பதை உறுதி செய்வதற்காக தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். ஆனால், அவரது மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அத்துடன் ஐகோர்ட்டில் முறையிடவும் அறிவுறுத்தியது.
இதற்கிடையே ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பெண் குழந்தை பிறந்ததாக ஜெயலலிதாவின் உறவினர்கள், நட்பு வட்டாரங்கள் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு டிடிவி தினகரன், புகழேந்தி உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி அம்ருதா சென்னை ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு, பிற்பகல் 2.15-க்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.