

சென்னை:
கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்து தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வுக்காண முயற்சி எடுக்கவில்லை. இதன் காரணமாக வரும் 15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய தொழிற்சங்கங்கள் முடிவெடுத்திருப்பது வருத்தம் அளிக்கும் செய்தியாக இருக்கிறது. போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கும் நேரத்தில் அத்துறைக்கான அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மட்டும் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். அதுதானே இவ்வளவு பெரிய நஷ்டத்திற்கு காரணம்.
எனவே ஓட்டையை அடைத்தால் தான் பானையில் நீர் தங்கும். இல்லாத பட்சத்தில் இது தொடர் கதையாகவே இருக்கும். எனவே முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு உரிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை நிறுத்தி ஊழியர்களுக்கு உரிய தொகையை பெற்றுத்தர வேண்டும். தமிழக அரசின் போக்கும் சரியில்லை, வரத்தும் சரியில்லை மொத்தத்தில் போக்குவரத்து சரியில்லை.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.