

சிதம்பரம்:
சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் 35 பயணிகள் பயணம் செய்தனர்.
சிதம்பரத்தை அடுத்த பு.உடையூர் பகுதியில் அந்த பஸ் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோர வளைவில் திரும்பும்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாய்க்காலில் பாய்ந்தது.
இதை அறிந்த பயணிகள் அலறினர். பின்னர் பஸ்சில் இருந்த அவசரகால வழி வழியாக அனைவரும் பத்திரமாக கீழே இறக்கி விடப்பட்டனர். இந்த விபத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.