

வந்தவாசி:
வந்தவாசி தாலுகா கொவளை கிராமத்தில் சுகநதி ஆற்றின் ஒருபகுதியில் கோடை காலத்திலும் குட்டை போன்று நீர் தேங்கி நிற்கும். ஆனால் இந்த ஆண்டு கடுமையான வறட்சியின் காரணமாக எப்போதும் வற்றாத அந்த குட்டை நீர் வறண்டு போனது. தற்போது இந்த ஆற்றில் கொஞ்சம் ஈரப்பதம் உள்ளது.
இந்த நிலையில் சுகநதி ஆற்றில் 2 அடி அகலமும், 2½ அடி உயரமும் கொண்ட பழங்கால அம்மன் கற்சிலை ஒன்று மணல் மீது தென்பட்டது.
பல ஆண்டுகளாக நீர் வற்றாமல் இருந்ததால் அந்த சிலை தெரியாமல் இருந்துள்ளது. நேற்று காலை அந்த வழியே சென்ற கிராம பொதுமக்கள் அம்மன் சிலை கிடந்ததை பார்த்து வந்தவாசி தாலுகா அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த வந்தவாசி தாசில்தார் எஸ்.முருகன், சமூக பாதுகாப்பு தாசில்தார் கே.ஆர்.நரேந்திரன், துணை தாசில்தார் திருமலை, வருவாய் ஆய்வாளர் மலர்விழி, கிராம நிர்வாக அலுவலர் பிரேம்குமார் ஆகியோர் விரைந்து சென்று சிலையை பார்வையிட்டனர். பின்னர் அந்த சிலையை வந்தவாசி தாலுகா அலுவலகம் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சிலை வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் பதிவுகள் வைப்பறையில் வைக்கப்பட்டுள்ளது.