மத்திய அரசு ஒதுக்கிய பணம் என்னவானது? சித்தராமையாவுக்கு அமித்ஷா கேள்வி

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய பணம் என்னவானது என முதல் மந்திரி சித்தராமையாவுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். #Karnataka #Assemblyelection #Amitshah
மத்திய அரசு ஒதுக்கிய பணம் என்னவானது? சித்தராமையாவுக்கு அமித்ஷா கேள்வி
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தல் மே மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரசும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பா.ஜ.க.வும் ஈடுபட்டு வருகின்றன. இரு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி பகுதியில் தேர்தல் பிர்ச்சார கூட்டத்தில் நேற்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

முதல் மந்திரி சித்தராமையா பாதுகாப்பு கருதி இரண்டு தொகுதிகளில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரை எங்களது வேட்பாளர் ஸ்ரீராமுலு நிச்சயம் தோற்கடிப்பார்.

சித்தராமையா தனது கைகளில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்ச் அணிந்துள்ளார். அது யாருடைய பணம். மக்களின் பணத்தில் தான் அவர் வாட்ச் வாங்கி அணிந்துள்ளார்.

மாநில அரசு எந்த திட்டத்தை செயல்படுத்துவத்ற்கும் 10 சதவீத கமிஷன் கேட்கிறது. இதனால் இந்த அரசை கமிஷன் அரசு என அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 14-வது நிதிக்குழுவில் இருந்து 2.2 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய பணம் என்னவானது? என கேள்வி எழுப்பியுள்ளார். #Karnataka #Assemblyelection #Amitshah #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com