

அம்பத்தூர்:
அம்பத்தூரை அடுத்த புதூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் லிங்கம். இவரது மகன் தர்ஷன் (வயது 14). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை துவைத்த துணிகளை காய வைப்பதற்காக தர்ஷன் மாடிக்கு சென்றார்.அப்போது அவர் சிறிய நாற்காலியில் நின்றபடி அங்கு கட்டியிருந்த கொடி கயிற்றில் துணிகளை போட்டார்.
அப்போது திடிரென தர்ஷன் நின்ற நாற்காலி சரிந்தது. இதில் நிலை தடுமாறிய அவர் கொடிக்கயிற்றில் விழுந்தார். இதில் அவரது கழுத்தில் கொடிக்கயிறு இறுக்கியது. அங்கேயே அவர் மயங்கி விழுந்தார்.மாடி என்பதால் அவரை யாரும் கவனிக்கவில்லை.
இதற்கிடையே பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஒருவர் மாடிக்கு வந்த போது தர்ஷன் மயங்கி கிடப்பதை கண்டு அவரது பெற்றோருக்கு தெரிவித்தார்.
உடனடியாக தர்ஷனை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தர்ஷன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தர்ஷன் கழுத்தில் கொடி கயிறு சிக்கி இறந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அம்பத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.