அமர்நாத் யாத்திரீகர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக லஷ்கர் தீவிரவாதிகள் 3 பேர் கைது

அமர்நாத் யாத்திரைக்கு சென்றவர்கள் மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய மூன்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளை காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமர்நாத் யாத்திரீகர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக லஷ்கர் தீவிரவாதிகள் 3 பேர் கைது
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த ஜூலை 10ன் தேதி அமர்நாத் யாத்திரீகர்கள் சென்ற வாகனத்தின்மீது தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு மாத காலம் நிறைவடைய உள்ள நிலையில் விசாரணையில் பெரும் திருப்பமாக இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை காஷ்மீர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் லக்‌ஷர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். 

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி முனீர் கான் கூறியதாவது:-

அனந்த்நாக் தாக்குதலில் லக்‌ஷர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பிற்கு தொடர்பு இருந்தது. இத்தாக்குதல் தொடர்பாக மூன்று தீவிரவாதிகளை கைது செய்துள்ளோம். அவர்கள் இந்தியாவை சேர்ந்த பிலால் அகமது ரெஷி, அய்ஜாஸ் வாகே மற்றும் சகூர் அகமது ஆவர். இவர்கள் மூவரும் தாக்குதல் நடத்திய நான்கு தீவரவாதிகளுக்கு வாகனம் மற்றும் தங்குமிடம் அளித்து உதவி செய்தனர். 

பாகிஸ்தானை சேர்ந்த அபு இஸ்மாயில், மாவ்யா, பர்கான் மற்றும் இந்தியாவை சேர்ந்த யவார் ஆகிய நான்கு பேரும் அனந்த்நாக் தாக்குதலில் ஈடுபட்டனர். முதலில் ஜூலை 9ம் தேதி தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் அன்று அந்த பகுதியில் யாத்திரை வாகனம் மற்றும் ராணுவ வாகனம் எதுவும் செல்லாததால் அடுத்த நாள் தாக்குதலை நடத்தினர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com